தமிழ் சினிமாவின் இசையும் பாடல்களும் இன்றும் கர்னாடக இசையின் ராகங்களை தான் அடிப்படையாக கொண்டுள்ளது. மேற்கத்தைய இசையின் தாக்கம் இருந்தாலும் தமிழ் சினிமாவின் இசை ராகங்களிலிருந்து பெரிதாக விலகவில்லை. ஆனால் கதைகள்?
காளிதாஸின் சகுந்தலை கதையின் தாக்கம் இன்றும் இருப்பதை பார்க்கிறோம். ஆனால் சகுந்தலையை தவிர்த்து வேறு பாரம்பரிய கதைகள் இன்றைய சினிமாவில் இருக்கிறதா?
விக்ரமாத்தித்தன் வேதாளம் கதை
ஒரு மகனும் அவனது தந்தையும் ஆற்றை கடந்து மணலில் நடந்து வரும்போது இரண்டு பெண்கள் காலடி தடயங்களை பார்க்கிறார்கள். அப்போது தந்தை மகனிடம், சிறிய காலடி தடயங்கள் கொண்ட பெண்ணை நீ கல்யாணம் செய்துகொள். பெரிய காலடி தடயங்களை கொண்ட பெண்ணை நான் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று கூற மகனும் சம்மதிக்கிறான். இருவரும் அந்த பெண்களை தேடிச் செல்கின்றனர். பல நாட்கள் தேடி அந்த பெண்களை அவர்கள் கண்டுபிடிக்கின்றனர்.
ஆனால் அந்த பெண்களை பற்றிய ஒரு உண்மை அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சிறிய காலடி தடயங்களை கொண்ட பெண் தான் பெரிய காலடி தடயங்கள் கொண்ட பெண்ணின் தாய். இப்போது தந்தையும் மகனும் என்ன செய்வது என்று குழம்புகிறார்கள். ஆனால் பிறகு முதலில் பேசியபடியே பெரிய காலடி கொண்ட பெண்ணை (மகளை) தந்தையும், சிறிய காலடி கொண்ட பெண்ணை (அம்மாவை) மகனும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த கதையை சொல்லிவிட்டு, விக்கிரமாதித்தனை பார்த்து வேதாளம் கேட்கிறது – “கல்யாணம் ஆனபின இந்த பெண்களுக்கு குழந்தை பிறந்தால், குழந்தைகளுக்கும் அந்த ஆண்களுக்கும் இடையிலான உறவு என்ன?”
இந்த முடிச்சை ஆதாரமாக கொண்டு வந்த படம் – பாலசந்தரின் அபூர்வ ராகங்கள். இந்த விடுகதையை கூட கதையில் விவாதிக்கப்படுகிறது. அபூர்வ ராகங்கள் போல பாரம்பரிய கதைகளை ஆதாரமாக கொண்ட படங்கள் எவை?
பிற கதைகள்
மணிரத்னத்தின் ரோஜா சத்தியவான்-சாவித்திரி கதையை சார்ந்துள்ளது என்று பேசப்பட்டது. ஆனால் சத்தியவான்-சாவித்திரி கதையின் சாயல் ரோஜாவில் மிகக் குறைவே. மாதவனின் நள-தமயந்தியும் இதுபோல் பெயரளவில் தான் தாக்கம்.
இன்று வரும் தமிழ் ரொமான்ஸ் படங்களின் கதைகளின் ஆதாரங்கள் யாவை? அத்தகைய ஆதாரக் கதைகளை ஒரு தொடர்பதிவாக எழுத உள்ளேன்.
...மீதி அடுத்த பதிவில்.